Monday, May 13, 2013

33 ஆண்டுகளுக்குப் பின் இன்று ஈரான் ஒரு உண்மையான வல்லரசு

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 33 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுமுகமாக ஈரானில் பல முக்கிய நகரங்களில் ஊர்வலங்களும்  பொதுக் கூட்டங்களும் கோலாகல வைபங்களும் நடை பெற்றன. இக் கூட்டங்களில் மிகப் பிரமாண்டமான கூட்டம் வழமை போல் ஈரானின் தலை நகரான தெஹ்ரானில் உள்ள அஸாதி சதுக்கத்தில் நடை பெற்றதுடன் அதன் போது சுமார் 30 இலட்சம் மக்கள் அதில் பங்கேற்றனர். தலை நகரின் வட மேல் திசையில் அமைந்துள்ள இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சதுக்கத்தை  நோக்கி தேசத்தில் எட்டுத் திசைகளிலும் இருந்து மக்கள் சாரி சாரியாக வந்து  குழுமி இருந்தனர். 

ஷாவும் அவனது குடும்பத்தினரும்,
கூட்டாளிகளும் 1979 ஜனவரி 16 ஆம்
 திகதி ஈரானை விட்டு தப்பி ஓட்டம்.
  
33 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய புரட்சியின் மிக முக்கியமான கட்டத்தில் கொடுங்கோலன் ஷா இப்புரட்சியை தூண்டி விட்ட இமாம் கொமைனி அவர்களை நாட்டை விட்டு தூரமாக்கி வைப்பதால் புரட்சியின் சீற்றத்தை குறைக்கலாம் என்று திட்டமிட்டு இமாம் அவர்களை பிரான்சின் தலை நகரான பாரிசிற்கு நாடு கடத்தினான். ஆனால் அங்கு இருந்தபடியே தொடர்ந்தும் தன்னுடைய உணர்ச்சி பூர்வ சொற் பொழிவுகளை ஒலி நாடாக்களில் பதிவு செய்து இரகசியமாக ஈரானுக்கு அனுப்பி வைத்ததன் மூலம் புரட்சியின் அக்கினிப் பிலம்புகள் அணையாமல் எரிந்து விடப்பட்டன. இறுதியில் அதன் சீற்றத்தைத் தாங்க முடியாமல் போன ஷாவும் அவனது குடும்பத்தினரும் கூட்டாளிகளும் 1979 ஜனவரி 16 ஆம் திகதி ஈரானை விட்டு தப்பி ஓடியதன் மூலம் ஈரானனுக்கு பிடித்திருந்த பீடை ஒழிந்தது.

எயார் பிரான்ஸ் ஜம்போ ஜெட் விமானம்
 மூலம் இமாம் கொமைனி அவர்கள்
 ஈரானுக்கு வந்து சேர்ந்தார்கள்.
  
அன்றில் இருந்து இரு வாரங்களுக்குப் பிறகு பிப்ரவரி முதலாம் திகதி விஷேடமாக அமர்த்தப்பட்ட எயார் பிரான்ஸ் ஜம்போ ஜெட் விமானம் மூலம் இமாம் கொமைனி அவர்கள் ஈரானுக்கு வந்து சேர்ந்தார்கள். அதன் போது இமாம் அவர்களை வரவேற்பதற்காக தலை நகர் தெஹ்ரானுக்கு வந்திருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 60 இலட்சம் ஆகும். இவ்வாறு அன்று உதித்த ஈரான் இஸ்லாமிய குடியரசு சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இன்று ஒரு உண்மையான வல்லரசாக தலை நிமிர்ந்து நிற்கின்றது என்று ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத்  அஹ்மட் நெஜாத் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
 
'பரஸ்பர கண்ணியத்தைப் பேணிய வண்ணம் ஈரானுடன் பேச்சு வார்த்தை நடாத்த ஐக்கிய அமெரிக்கா தயாராகும் பட்சத்தில் ஈரான் அதனை ஏற்கவே செய்யும். பெயரளவு மாற்றம் ஒன்று அல்லாமல் உண்மையான அடிப்படைக் கொள்கை மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வொஷிங்டன் தாயாராகும் நிலையில் மாத்திரமே இவ்வாறான சந்திப்பு ஒன்று சாத்தியமாகும்' என்றும் நெஜாத் வலியுறுத்தினார்.
 
தொடர்ந்து பல ஆண்டுகளாக அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் துணை நின்று தானும் நேரடியாக அவைகளில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக ஐக்கிய அமெரிக்கா உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளது மாத்திரம் அல்லாது அநீதியை வெறுத்து ஒதுக்கும் சகல நாடுகளினதும் வெறுப்பிற்கு இலக்காகி உள்ளது. இந்த  நிலையில் அமெரிக்கா பெரும் பொருளாதார சிக்கலிலும் சிக்கித் தவிப்பதை காணலாம். இவ்வாறான அவல நிலையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு மாற்றம் தேவை என்பதை வொஷிங்டன் காலம் கடந்தேனும் உணர்ந்து உள்ளது. இருந்து போதிலும் அது கூறும் மாற்றம் உண்மையான மாற்றங்களாக இருக் வேண்டும் என ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
 
'ஜோர்ஜ் புஷ்ஷின் இருண்ட ஆட்சிக் காலம் போன்றதொரு காலத்தை மீண்டும் கொண்டு வர எண்ணுபவர்கள் புஷ்ஷினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழிவை விட பாரிய ஒரு இழிவையே பெறுவார்கள். அதன் மூலம்  அமெரிக்க மக்கள் இப்போது உள்ளதை விட மிக கேவளமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.' என்றும் அஹ்மத் நெஜாதி எச்சரித்தார்.
 
தொடர்ந்து பேசிய ஈரானிய ஜனாதிபதி, 'அல்லாஹ்வின் அருளாலும் ஈரானிய மக்களின் திட நம்பிக்கையின் காரணமாகவும் ஈரானுக்கு இருந்த பல தடைகள் தற்போது நீங்கி உள்ளன' என்றும் கூறினார். மேலும் அவர் ஈரான் விண்வெளி, அணு சக்தி தொழில் நுட்பம், அதி உயர் மருத்துவத் துறை போன்ற துறைகளில் தற்போது பெற்றுள்ள வளர்ச்சிகளை குறிப்பிட்டு தான் ஈரான் ஒரு வல்லரசாக உயர்ந்து உள்ளதை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாக கூறினார். 
 
கடந்த பல ஆண்டுகளாக ஈரான் விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளில் பெற்று வந்துள்ள முன்னேற்றத்தைக் கண்ணுறும் சர்வதேச அரசியல் ஆய்வாலர்கள் ஈரான் இன்று ஒரு முக்கிய பலமிக்க நாடாக உயர்ந்து இருப்பதை மறுப்பதற்கு இல்லை என்று குறிப்பிடுகின்றனர். மேலும் அவர்கள் சகல முக்கிய துறைகளிலும் தன்னிறைவு பெற்றுள்ள ஈரான், தன்னுடைய எந்த தேவைக்காகவும் பிற நாடுகளிடம் கை ஏந்தும் நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இந்த அம்சங்களே ஒரு நாட்டை வல்லரசு என வகைப்படுத்தும் முக்கிய அம்சங்களாகும்.
 
குறிப்பாக மருத்துவத் துறையில் ஈரான் பாரிய வெற்றிகளை பெற்று வருகின்றது. சில தசாப்தங்களுக்கு முன்பு முக்கிய அறுவை சிகிச்சைகளுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் மருத்துவர்களின் துணையை நாடவேண்டிய நிலையில் இருந்து ஈரானை நோக்கி இன்று மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கும் ஏனைய அதி உயர் தொழில் நுட்ப சிகிச்சைகளுக்கும் நோயாளர்கள் வெளி நாடுகளில் இருந்து வரும் நிலைக்கு ஈரான் முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பதையும் சர்வதேச அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.