Friday, August 8, 2014

ஷீஆக்களைப் பற்றிய அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்களின் நேர்காணலும், கருத்துகளும்.



அல்அஸ்ஹர் பல்கலைக்கழக வேந்தர் ஷைகுல் அஸ்ஹர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்கள், எகிப்திய அல்நீல் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல்:

ஷீஆக்களைப் பற்றி அல்அஸ்ஹர் என்ன சொல்கிறது? எகிப்தின் அல்நீல் செனலுக்கு அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்கள் வழங்கிய  நேர்காணலும், ஷீஆக்களைப் பற்றிய அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் கலாநிதி அஹ்மத் அல்தைய்யிப் அவர்களின் கருத்துகளும்.

கேள்வி:     ஷீஆக்களின் நம்பிக்கை தொடர்பாக ஏதாவது பிரச்சினைகள் உங்கள் பார்வையில் தென்படுகின்றதா?

பதில்:     கிடையாது. இல்லவே இல்லை. ஐம்பது வருடங்களுக்கு முன், அல்அஸ்ஹர் பல்கலைக்கழ வேந்தர் ஷைகுல் அஸ்ஹர் ஷைக் மஹ்மூத் ஷல்தூத் அவர்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்பின் பிரகாரம், ஷீஆ மத்ஹப் (சிந்தனைப் பிரிவு) ஆனது, ஏனைய மத்ஹப்களோடு, ஐந்தாவது மத்ஹபாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஷைகுல் அஸ்ஹர் ஷைக் மஹ்மூத் ஷல்தூத்
கேள்வி:    எமது பிள்ளைகள் ஷீஆ இஸ்லாமிய சிந்தனைப் பிரிவை தழுவிக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் இதற்காக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?

பதில்:    அவர்கள் ஷீஆ மத்ஹபைத் தழுவிக் கொள்ளட்டுமே. யாராகிலும் ஒருவர் மாலிகி மத்ஹபை, அல்லது ஹனபி மத்ஹபை விட்டு விலகினால், அவரை நாம் விமர்சிப்பதில்லையே. இந்தப் பிள்ளைகள் நான்கு மத்ஹப்களையும் விட்டு விட்டு ஐந்;தாவது மத்ஹபில் இணைந்து கொள்கின்றார்கள்.

கேள்வி:    ஷீஆக்கள் எமது உறவினர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கள் பிள்ளைகளை திருமண பந்தத்தின் மூலம் தம்முடன் இணைத்துக் கொள்கின்றார்களே?

பதில்:    இதில் என்ன தவறு? மதங்களுக்கிடையிலான திருமணமே அனுமதிக்கப்பட்டுள்ளதே.

கேள்வி:    ஷீஆக்களிடம் வித்தியாசமான வேறு ஒரு குர்ஆன் உள்ளது எனக் கூறப்படுகின்றதே. இது பற்றி?

பதில்:    இது, வயது முதிர்ந்த பெண்களின் ஆதாரமற்ற மூடநம்பிக்கையும் கட்டுக்கதையும். ஷீஆக்களிடம் இருக்கின்ற குர்ஆனுக்கும் எங்களிடம் உள்ள குர்ஆனுக்கும் இடையில் எவ்வித வித்தியாசமுமில்லை. அவர்களின் குர்ஆனில் காணப்படுகின்ற அகர எழுத்துகளுக்கும் எங்கள் குர்ஆனின் அகர எழுத்து வரிசைகளுக்கும் இடையிலேயும் கூட வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை.

கேள்வி:    ஒரு நாட்டின் (சவூதி அரேபியா) 23 மத போதகர்கள், 'ஷீஆக்கள் காபிர்கள்' என ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கியுள்ளார்களே?

பதில்:    முஸ்லிம்களுக்காக ஃபத்வா வழங்கும் அதிகாரபூர்வமான அமைப்பு அல்அஸ்ஹர் மாத்திரமே. மேலே கூறப்பட்ட ஃபத்வா செல்லுபடியற்றது. நம்பகத்தன்மையற்றது.

கேள்வி:    ஷீஆக்களுக்கும் சுன்னாக்களுக்கும் இடையில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரிவினை – வித்தியாசம் என்ன கூறி நிற்கின்றது ஷைக் அவர்களே?

பதில்:    வெளிநாட்டுச் சக்திகளின் கொள்கை வகுப்பாளர்களின் சதியே இது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. அவர்களின் நலன் காக்க ஷீஆ-சுன்னா பிளவினை தங்கள் கொள்கையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கேள்வி:    எங்களிடம் மிகவும் முக்கியமான கேள்வி ஒன்றுள்ளது. ஷீஆக்கள் கலீபாக்களான அபூபக்கர் (ரழி) மற்றும் உமர் (ரழி) ஆகியோரை ஏற்றுக் கொள்வதில்லையே. அப்படிப்பட்ட ஷீஆக்களை முஸ்லிம்கள் என்று தங்களால் எவ்வாறு கூற முடியும்?

பதில்:    ஆம். ஆம். அந்த கலீபாக்களை ஷீஆக்கள் ஏற்றுக் கொள்தில்லைதான். ஆனால், அபூபக்கரை, உமரை ஏற்றுக் கொள்வது இஸ்லாமிய அடிப்படை (உசூலுத்தீன்) இன் ஒரு பகுதியா? அபூபக்கர், உமர் பற்றிய சம்பவம் வரலாற்று ரீதியான ஒரு சம்பவம். (உசூலுத்தீன் எனும்) அடிப்படை நம்பிக்கைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

கேள்வி:    (பதிலைக் கேள்வியுற்ற நிருபர், சற்று ஆச்சரியமடைந்தவராகக் கேட்கிறார்) ஷீஆக்களின் அடிப்படைப் பிரச்சினை – அவர்களின் இமாம் - தற்காலத்திற்குரிய இமாம் (இமாமுல் அஸ்ர்) ஆயிரம் வருடங்கள் கழிந்தும் இன்னும் உயிர் வாழ்கின்றார் எனக் கூறுகின்றனரே?

பதில்:     அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஏன் இது சாத்தியமில்லை? ஆனாலும் நாங்கள் சுன்னாக்கள் என்பதனால் அவர்களைப் போன்று இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று எந்தக் காரணமும் கிடையாது.

கேள்வி:     (இமாம் முஹம்மது தகி அல்ஜவாத் (அலை) (ஷீஆக்களின் ஒன்பதாவது இமாம்) அவர்களைக் குறித்துக் கேட்கப்பட்டது.) அவர்களின் இமாம்களில் ஒருவர், எட்டு வயதுடைய சிறுவராயிற்றே. அவரை, ஷீஆக்கள் தங்களின் இமாமாக நம்பிக்கை கொண்டுள்ளனரே? எட்டு வயதுக் குழந்தை இமாமாக இருப்பதென்பது சாத்தியமா?

பதில்:    தொட்டிலில் உள்ள குழந்தை நபியாக (நபி ஈஸா (அலை) அவர்கள்) வர இயலுமாயின், ஏன் எட்டு வயதுச் சிறுவர் இமாமாக வர முடியாது? இது ஆச்சரியமானதொன்றல்ல. சுன்னாக்களாகிய நாங்கள் இக்கொள்கையை ஏற்றுக் கொள்ளா விடினும், இக்கொள்கை அவர்களின் இஸ்லாத்திற்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர்கள் முஸ்லிம்களே!.

தமிழில்: அபூகுமைல்

No comments:

Post a Comment