Thursday, March 10, 2016

வஹ்ஹாபிஸம் என்பது அதிகார வழிபாடு!


 ஆக்கம்: இஸ்ஸத் ஹுஸைன்















இஸ்ஸத் ஹுஸைன்

(05.03.2016 ஐலண்ட் ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்: அபூதர்)
வஹ்ஹாபிஸம் என்பது நவீனத்துவத்திற்கு எதிர்வினையாக இஸ்லாத்தை மத்திய காலப் பகுதிக்கு பின்னெடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஆதி மனித நடத்தைக்கான ஓர் இயக்கம் எனப் பொதுவாக நினைக்கப்படுவது சரியான ஒன்றல்ல என்பதையும், மாறாக அது நவீனத்துவத்தை அனுசரித்து, அந்நோக்கத்திற்குரிய அதனது யுக்தியாக இஸ்லாத்தை அதிகார வழிபாட்டிற்கான சித்தாந்தமாக மாற்றிவிடுவதாகும் என்பதையும் நான் இந்த கட்டுரையில் விவாதிக்க விரும்புகிறேன். இந்த விஷயம் பற்றிய எனது சிந்தனையின் பின்னணியில், நான் பல தசாப்தங்களுக்கு முன்னர் படித்த மொந்தர்லண்ட் உடைய சிறப்புமிக்க நாவல் ஒரு இருக்கின்றது. அதன் கதையம்சம் பின்வருமாறு செல்கிறது: மெய்விளக்கத்தின் பெருமானங்களை இழந்து நிற்கும் உருமாதிரியான நவீன மனிதன், இரண்டு கால்களைக் கொண்டிருக்கின்றான்; அதில் ஒன்று பணத்திற்கான தூண்டுதலாகவும், மற்றொன்று அதிகாரத்திற்கான தூண்டுதலாகவும் காணப்படுகிறது. அந்தப் பயங்கரமான பேர்வழி இவ்விரண்டு கால்களினால் வழியெல்லாம் நிலம் அதிர நடந்து சென்று, பாரிய அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்துகின்றான்;.இத்தகையதொரு பேரழிவை, 1914ல் முதலாவது உலக மா யுத்தததின் ஆரம்பத்திலிருந்து உலகம் கண்டதில்லை.
ஆயினும், எல்லாவற்றிற்கும் முன்னதாக, சில குழப்பங்களை நான் தெளிவுபடுத்தியாக வேண்டும். நான், வஹ்ஹாபிஸத்தைப் பூண்டோடழிப்பதற்கான ஒரு வாதம் சம்பந்தமான எனது கடைசி கட்டுரையில் (27.02.2016 ஐலண்ட் ஆங்கில நாளிதழில் வெளிவந்தது), சவூதி அரேபியா அல்லாமல், ஐ.எஸ். இயக்கம் தானாகவே வஹ்ஹாபிஸத்தின் நடைமுறைகளை அதன் முழுமையான ஆதாரப்பூர்வமான வடிவத்தில் அமுல்படுத்தி வருகிறது என்ற மிகவும் சிக்கலான கேள்விக்கு பதில் காணப்பட வேண்டும் எனக் கூறி முடித்திருந்தேன். மேலும் நான், பாலியல் அடிமைத்துவம் போன்ற ஐ.எஸ். இயக்கத்தைத் தனிப்பட அடையாளப்படுத்திக் காட்டும் நடைமுறைகளுக்கு, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அசலாகப் பிரசாரம் செய்தவற்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை எடுத்துக் காட்டுவதனால் மாத்திரம்தான், இந்த கேள்விக்கான தீர்வைக் காண முடியும் என எழுதியிருந்தேன். அவ்வாறில்லை என்றால், ஐ.எஸ். இயக்கத்தை மட்டும்தான் பூமியிலிருந்து முற்றுமுழுதாக பிடுங்கி எறிய வேண்டுமே தவிர வஹ்ஹாபிஸத்தை அன்று. மாறாக, ஐ.எஸ். இயக்கம்தான் வஹ்ஹாபிஸத்தின் முழுவடிவிலான ஆதாரபூர்வ வெளிப்பாடு என்றால், வஹ்ஹாபிஸத்தைக் கைவிட்டுவிட சவூதி அரேபியாவை சர்வதேச சமூகம் வற்புறுத்துவது என்பது, பதிலுரைக்க முடியாத ஒரு விஷயமாக மாறி விடுகிறதென நான் நினைக்கிறேன்.


வஹ்ஹாபிஸம்தான் சர்வதேசப் பயங்கரவாதத்திற்கான மிகப்பெரும் மூலகாரணம் என 2013ல் ஐரோப்பிய யூனியன் உத்தியோகப்பூர்வமாகப் பிரகடனஞ் செய்ததை நினைவுபடுத்திக் கொள்வது இங்கு பொருத்தமானதாகும். இந்தப் பிரகடனம், அறிஞர்களினதும் நிபுணர்களினதும் ஆராய்ச்சிகளின் பின்புலத்தோடு செய்யப்பட்டது என நாம் நிச்சயமாக யூகித்துக் கொள்ளலாம். எனவே, வஹ்ஹாபிஸத்தைக் கைவிட்டுவிட சவூதி அரேபியாவை ஐரோப்பிய யூனியன் வற்புறுத்துவது நியாயமானதேயாகும்.
ஆயினும், ஐரோப்பிய யூனியன் என்ன சொல்கின்றது என்பதற்கு, இலங்கையிலும் பிறநாடுகளிலும் வஹ்ஹாபிஸத்தின் செல்வாக்கினால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம்கள் எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்கப் போவதில்லை. அந்த விஷயத்தில், மரபுவழி இஸ்லாமிய (அஹ்லுஸ் ஸுன்னாஹ்) அறிஞர்கள் என்ன சொல்கின்றனர் என்பதற்குக்கூட அவர்கள் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. மரபுவழி இஸ்லாமிய அறிஞர்கள் ஏறத்தாழ என்ன சொல்கின்றனர் என்றால், வஹ்ஹாபிகளும் அவர்களின் படியாக்கங்களும் பழிபாதகங்களுக்கு அஞ்சாது தமது கொள்கை கோட்பாடுகளைக் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ சுன்னாஹ்விலோ இருந்து மெயப்பிக்கப் பகீரதப் பிரயத்தனங்கள் மேற்கொள்கின்றனர். தமது நோக்கங்களுக்குப் பொருந்தி வருகிறதெனக் கண்டால், குர்ஆன் வசனங்களைத் தனித்தனியாக சொல்லின் நேர் அர்த்தம் செய்து, அந்த வசனங்களுக்கு முழுமையான அர்த்தத்தைத் தரக்கூடிய சூழமைவுகளைப் புறக்கணித்து விடுகின்றனர். அவர்கள் மூல வசனங்களுக்கு வேண்டுமென்றே வலிந்து தப்பான புரிதல் கொள்ள வைப்பதில் ஆற்றல் உடையவர்கள். ஆறு அங்கீகரிக்கப் பெற்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல்களில் இடம் பெறாத, மிகவும் சந்தேகமான ஆதாரங்களைக் கொண்ட ஹதீஸ்களை அவர்கள் உபயோகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதே மாதிரியான இன்னும் பல இருக்கின்றன. இதன் விளைவாக, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அசலாக பிரசாரம் செய்தவற்றில், ஐ.எஸ். இயக்கத்தின் கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா எனத் தேடிக் கண்டுபிடிப்பது எதிர்பார்க்க முடியாததொரு காரியமாகும். வஹ்ஹாபிகளும் அவர்களின் படியாக்கங்களும் தாம் நம்ப வேண்டியதை நம்புகின்றனர்;. மேலும், குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் அதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வஹ்ஹாபிஸத்தைப் பூண்டோடழிப்பதற்கான இலக்கை நோக்கி நகர்வதற்கு மிகச் சிறந்த வியூகம், மும்முனைகளைக் கொண்டதாகும்: முதலாவதாக, வஹ்ஹாபிஸத்தின் உள்மையப் பகுதியிலேயே முட்டாள்தனம்; இடம்பெற்றிருக்கிறது. அந்த உள்மையப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒவ்வொன்றுமே முட்டாள்தனமானதுதான் என்பதை எடுத்துக் காட்ட வேண்டும். இரண்டாவதாக, வன்முறையினதும் பயங்கரவாதத்தினதும் உச்சநிலையே வஹ்ஹாபிஸத்தின் உள்ளியல்பு என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். முன்றாவதாக, வஹ்ஹாபிஸம் அதிகாரத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமல்லாத ஒரு கொள்கை என்பதனால், அதன் கீழ் வரும் முஸ்லிம் மக்கள், வெளியிலிருந்து இயக்கப்பட்டு அதிகாரத்தை வழிபடுவர்களாக மாற்றப்படுகின்றனர் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும். அத்துடன், வஹ்ஹாபிஸத்தின் பரம்பலுக்கு அதன் துவக்கத்திலிருந்து இன்று ஐ.எஸ். இயக்கம் வரை, சில மேற்கத்திய சக்திகள் பின்னணியில் இருப்பதை எடுத்துக் காண்பிக்க முடிந்தால், அதுவும் உதவியாயிருக்கும். 
வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியே - மனிதப் புனிதர்களை வழிபடுவது மற்றும் பல தெய்வக் கொள்கை பற்றிய போலிக் குற்றச்சாட்டே - முட்டாள்தனமானது என நான் ஏற்கனவே முந்தைய கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளேன். இதனைத் தொடர்ந்து வருவது என்னவென்றால், 1801ல் 5000 அப்பாவி ஆண்கள்; பெண்கள்; குழந்தைகளின் படுகொலையுடன் நடத்தப்பட்ட கர்பலா சூறையாடல் போன்ற நிகழ்வுகள்தான்; இவையும். இவை, முட்டாள்தனமானவை, அறிவுணர்ச்சி துண்டிக்கப் பெற்ற பேதைமை கொண்டவை, கொடூர மிருகத்தன்மை வாய்ந்தவை, மனிதத்தன்மைக்குக் கீழ்நிலைப்பட்ட மடமைக்கு உரித்தானவை இன்னுஞ் சொல்லப் போனால், இவைதாம் வஹ்ஹாபிஸத்தினதும் அதன் எல்லா படியாக்கங்களினதும் உள்மையப்பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இப்போது நான், உச்சநிலை வன்முறையும், பயங்கரவாதமும்தான் வஹ்ஹாபிஸத்தின் உள்ளியல்பே என்ற கருத்தை நிரூபிக்க நாடுகிறேன்.


முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், ஒரு விபச்சாரியைக் கல்லெறிந்து கொல்வதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். தற்பொழுது, வஹ்ஹாபிஸத்தை ஆதரிப்பவர்களுள் முன்னணியில் இடம் பெற்றிருப்பவர்களில் ஒருவரான நடானா டி லோங்பாஸ் என்பவரின் கருத்துப்படி, 'அந்தப் பெண் ஐயத்திற்கிடமின்றி மூளைக் குழப்பம் உள்ளவளாக: திரும்பத் திரும்ப விபச்சாரத்தில் ஈடுபட்டு இன்னும் அதனைப் பற்றி பகிரங்கமாகப் பேசி வந்ததாலும், இதனை இப்னு அப்துல் வஹ்ஹாப் மிகுந்த தயக்கத்துடனேயே செய்திருக்கிறார்.' இப்னு அப்துல் வஹ்ஹாபின் குற்றத்திற்குப் பாதுகாப்பு செய்வதற்காக, இந்த நவீன பெண்மணி மிக நீண்ட வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்; ஆயினும் அவர், விபச்சாரத்திற்கான தண்டனையாக 80 கசையடிகளுக்கு மேலதிகமாக எதனையும் குர்ஆனே விதிக்கவில்லை என்ற பதிலுரைக்க முடியாத வாதத்தை இப்னு அப்துல் வஹ்ஹாப் பயன்படுத்தவில்லை என்பதையும், மேலும், ஒரு குர்ஆனிய சட்ட விதிமுறையை மிகவும் சந்தேகமான ஆதாரங்களைக் கொண்ட ஒரு ஹதீஸ் ஒதுக்கித் தள்ளுவதை அனுமதிக்க முடியாது எனபதையும் குறிப்பிடத் தவறியிருக்கின்றார்;. நபியவர்களின் மரணத்திலிருந்து தொடர்ந்த நீண்ட பல நூற்றாண்டுகளில், விபச்சாரத்திற்காகக் கல்லெறிந்து கொல்வது மிக மிக அரிதாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற வாதத்தையும் இப்னு அப்துல் வஹ்ஹாப் பயன்படுத்தத் தவறி விட்டார் என்பதையும் நடானா குறிப்பிடவில்லை. தான் ஷரீஆவை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றுவதாகப் பெருமை பாராட்டிக் கொண்ட உதுமானிய சாம்ராஜ்யத்தின் பல நூற்றாண்டு கால ஆட்சியிலும் கூட, விபச்சாரத்திற்காகக் கல்லெறிந்து கொல்வது ஒரேயொரு முறைதான் நிகழ்ந்துள்ளது என நான் நம்புகிறேன்.
கொடுமைப்படுத்தும் விருப்பத்துடனான மிருகத்தன்மை, இப்னு அப்துல் வஹ்ஹாப் உடைய தனிமனிதப் பண்பியல்புகளுள் ஒரு பகுதியாக விளங்கியது என்பதை இந்த வரலாற்றுக் கீற்று விபரிக்கினறது. இக்கட்டுரையில் முன்னதாக நான் குறிப்பிட்டவாறு, வஹ்ஹாபிஸத்தை ஆதரிப்பவர்களின்  உள்மையப்பகுதியில் அமைந்திருக்கும் இரட்டை நிலைபாட்டையும் நான் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன்;.
பயங்கரவாதத்தைப் பொறுத்தவரையில், அது வஹ்ஹாபிஸத்தின் துவக்கத்திலிருந்தே உடன் இருந்து வந்திருக்கிறது. பயங்கரவாதம் அதன் உள்ளியல்பில், போரில் ஈடுபடாத அப்பாவிகளை வகைதொகையற்று கொன்று குவிப்பதையும் உள்ளடக்கி இருக்கின்றது. வீரத்தியாகிகளின் மரணத்தைத் தழுவிக் கொண்ட, கலீஃபா உமர் உடைய சகோதரரின்; கல்லறையின் மீது நடாத்தப் பெற்ற முதலாவது வஹ்ஹாபி பயங்கரவாதத் தாக்குதலுக்கு இப்னு அப்துல் வஹ்ஹாப் தாமே தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த நஜ்த் கிராமப் புறங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இப்னு அப்துல் வஹ்ஹாப், தமது விருப்பத்துக்கு உகந்த ஆயுதமான கோடாரியுடன் கலந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்னு அப்துல் வஹ்ஹாப் தொடங்கிவைத்த பயங்கரவாத மரபு, 1801ல் கர்பலா படுகொலைப் படலத்தில் முதலாவதாக முழுமையாக மலர்ச்சியுற்று, இன்றைய தினம் வரை அது தொடர்ந்து வருகிறது. வஹ்ஹாபிஸத்தைப் பற்றி அசுத்தங்களும் நோய்கிருமிகளும் அகற்றப் பெற்ற ஒரு தோற்றத்தை வெளிப்பட வைக்க சவூதிகள் முயன்று வருகின்றனர்;. அவர்களின் கூற்றுப்படி, அதன் காரணமாக ஏற்படும் பயங்கரவாதச் செயல்கள்; சாதாரணமான வழுவல்கள் அல்லது பக்க விளைவுகள்தான் எனப்படுகிறது. அப்படியிருக்க, உண்மை என்னவென்றால், வஹ்ஹாபிஸம் எப்பொழுதுமே அதனைப் பின்பற்றுவோரை வெறியூட்டி பயங்கரவாதத்திற்கு அழைத்துச் செல்வதையே நாம் காண்கிறோம்;. இது விவகாரத்தின் முக்கியமானதொரு பகுதியாகும்;. சவூதி அரேபியா வஹ்ஹாபிஸத்திற்கு தான் தலைமை தாங்கியிருப்பதை உதறித் தள்ளிவிடச் செய்வதற்காக, அதனை சர்வதேச சமூகம் வற்புறுத்த வேண்டும் என்பதற்கு இது போதுமான காரணமாகும். 
வஹ்ஹாபிஸம் என்பது அதிகாரத்தின் வழிபாட்டிற்கான ஓர் இலட்சியக் கொள்கைவாதம் என்ற கேள்விக்கு நான் இப்போது வருகிறேன். அண்மை நாட்களில் ஒன்றுக்கும் அதிகமான எனது வாசகர்கள், கதரீன் ஷக்டாம் என்பவரின் ஜூன் 2015 கட்டுரையொன்றை எனக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்;. அதில் அந்தப் பெண்மணி பின்வரும் வாதத்தை முன் வைக்கின்றார்: 'வஹ்ஹாபிஸம் என்பது எடுத்தெறிந்து விடக்கூடிய முதுமரபு மீட்சிக்கான இயக்கம் ஒன்றன்று, மாறாக அது, நவீனமயப்படுத்தும் ஒன்றாகும். மேலும், அதனை ஒட்டுமொத்தமாக படுகொலைகளை மேற்கொண்ட ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடலாம்: ஓராயிரம் பேர்களுக்கும் அதிகமானவர்களின் கழுத்துகளைத் துண்டித்த பிரெஞ்சுப் புரட்சி, ஸ்டாலின், மாவோ, பொல்பொட் போன்றவர்களினால் நிகழ்த்தப் பெற்ற படுகொலைப் படலங்கள் என்பன.' தத்துவ ஞானி ஜோன் கிரே போன்ற மற்றவர்களும் கூட, பாரீஸ் குண்டு வெடிப்பின் பிறகு, இதே வகையிலான வாதத்தை எடுத்து வைக்கின்றனர். 



நான் இந்த கருத்தோட்டத்தை ஆதரிக்கும் வண்ணம், வஹ்ஹாபிஸம் என்பது வேருக்கு (அடிப்படைகளுக்கு)த் திரும்பிவர அழைப்பு விடுக்கும் மத (சமய)ச் சீர்திருத்த மற்றும் மறுமலர்ச்சிக்கான இயக்கங்களுடன் ஒப்பிடப்படக் கூடியது அன்று என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன், லூதரேனிஸம் தேசியவாதத்திற்கும், கெல்வினிஸம் முதலாளித்துவத்திற்கும், இரண்டும் சீர்திருத்தத்திற்கு எதிரான செல்நெறியின் வாயிலாக கத்தோலிக்கத்தின் புத்தூக்கத்திற்கும், மெதடிஸம் மற்றும் பிரிட்டனின் மதப் பிரிவுக் குழுக்கள் சோஷலிஸத்திற்கும் இட்டுச் சென்றன. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான பௌத்த, இந்து சீர்திருத்த இயக்கங்களையும், சாதகமானவையாகக் காணலாம். அதே போன்று, ஜமாலுத்தீன் அல் ஆஃப்கானியினால் உணர்வூட்டப் பெற்ற இஸ்லாமிய சீர்திருத்த இயக்கத் தையும் கருதலாம். ஆனால், வஹ்ஹாபிஸத்தில் நேர்மறையானது எதையும் என்னால் காண முடியவில்லை. அதன் பிந்திய வெளிப்பாடான ஐ.எஸ்.இயக்கத்தைப் பொறுத்த வரையில், அது பேரச்சம் தரக் கூடியதும், குருதிக் கறை படிந்ததும், காட்டுமிராண்டித்தனமானதுமான ஒரு பயங்கரமாக காட்சியைத் தருகிறது. வஹ்ஹாபிஸத்தைப் பற்றி அது அதிகார வழிபாட்டிற்கான ஓர் இயக்கம் என்ற வகையில் இன்னும் அதிகமதிகம் சொல்ல வேண்டியுள்ளது. கவிஞர் ஈட்ஸ் உடைய மாபெரும் தீர்க்கதரிசனச் செய்யுளின் இறுதி அடிகளை ஞாபகப்படுத்தி இக்கட்டுரையை நான் முடிக்கிறேன்: 'என்ன இந்த அகோர மிருகம் பெத்லஹெம்மை நோக்கி தலை குனிந்து இழுத்திழுத்துக் கொண்டு நடக்கின்றது....மீண்டுமொரு முறை பிறப்பதற்கு!' ஐ.எஸ்.இயக்கம் என்ற அகோர மிருகம் மக்காவை நோக்கி தலை குனிந்து இழுத்திழுத்துக் கொண்டு நடக்கின்றது....மீண்டுமொரு முறை பிறப்பதற்கு!




கட்டுரையாசிரியரின் மின்னஞ்சல் முகவரி: izethhussain@gmail.com


No comments:

Post a Comment