Tuesday, August 13, 2019

அமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் சவூதி அரசால் தாக்குப் பிடிக்க முடியாது

by Latheef Farook


அமெரிக்க ஆதரவு இல்லாவிட்டால் சவூதி அரசால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி
ஆனாலும் முஸ்லிம்களின் புனித ஸ்தலங்களான மக்கா மதீனா என்பனவற்றின் பாதுகாவலனாக சவூதியே உள்ளது
உலகம் முழுவதும் அலட்சியப் போக்கில் முஸ்லிம்கள்


அமெரிக்க இராணுவத்தின் ஆதரவு இன்றி சவூதி அரேபிய அரசால் இரண்டு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இமமாதம் மூன்றாம் திகதி இம்பெற்ற ஒரு நிகழ்வில் பேசும் போது சவூதி அரேபிய மன்னர் சல்மானை எச்சரித்துள்ளார். மிசிசிப்பி சவுதஹெவனில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் பேசும் போது டிரம்ப் தனது ஆதரவாளர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். “நாங்கள் தான் சவூதியை பாதுகாக்கின்றோம். அவர்களை பணக்காரர்கள் என்று நீங்கள் கூறுவீர்களா? மன்னரை ஆம் மன்னர் சல்மானை நான் நேசிக்கின்றேன். நான் அவரிடம் சொன்னேன். நாங்கள் தான் உங்களை பாதுகாக்கின்றோம். நாங்கள் இல்லையென்றால் நீங்கள் இரண்டு வாரங்கள் கூட இங்கு பதவியில் இருக்க முடியாது. எங்களது இராணுவத்துக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்றேன்.” இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
அதே தினத்தில் அமெரிக்கா 38 பில்லியன் டொலர் பெறுதியான இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையிலும் ஒப்பமிட்டுள்ளது. 2018 முதல் 2028 வரை இந்த உடன்பாடு அமுலில் இருக்கும்.
கடந்த 14 நூற்றாண்டு வரலாற்றில் இது இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் மிகவும் வெற்கக் கேடான ஒரு தருணமாகும். முதலாவது உலக மகா யுத்தத்தின் பின் சவூதியில் பிரிட்டிஷ் காலணித்துவ சக்திகளாலும், யூத சக்திகளாலும் ஸ்தாபிக்கப்பட்ட அரசு மிகவும் கீழ்த்தரமான ஒரு நிலைக்கு சென்றுள்ள தருணம் இதுவாகும்.
ஒரு சுவிசேஷ யூதர் என்ற வகையில் ஜனாதிபதி டிரம்ப் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் முதல் தர எதிரியாக இருக்கின்றார். சுவிசேஷ கிறிஸ்தவ மற்றும் யூதர்களின் இஸ்லாத்துக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை அவர் வெளிப்படையாகவே அமுல் செய்கின்றார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும் செய்த முதலாவது காரியங்களில் ஒன்று ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வர தட விதித்தமையாகும்.
சவூதி அரேபியா அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெற்கக் கேடான நிலை உலகம் அறிந்த ஒன்றே. டிரம்ப் பதவியேற்ற கையோடு அவரை சவூதி அரேபியாவுக்கு வரவழைத்து பெரும் மரியாதை செலுத்தபபட்டது. சவூதியின் அதி உயர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதி கொண்ட தனிப்பட்ட பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டன. 300 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. இஸ்லாத்தின் புனிதப் பிரதேசங்கள் மீது தொடர்ந்து தனது கடடுப்பாட்டை வைத்திருக்கவும் தனது பதவியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் சவூதி அரசால் கொடுக்கப்பட்ட இலுஞ்சம் தான் இவை.
சவூதியையும் முழு முஸ்லிம் உலகையும் நிராகரித்து விட்டு இஸ்ரேலில் உள்ள தனது நாட்டு தூதரகத்தை டிரம்ப் டெல்; அவிவ்வில் இருந்து ஜெரூஸலத்துக்கு மாற்றினார். சகல விதமான சட்டங்கள் மற்றும் தார்மிக கொள்கைகளை மீறும் வகையில் இது அமைந்திருந்தது.
டிரம்ப்பின் யூத மருமகனான ஜெராட் குருஷ்னர் இந்த விடயத்தில் முக்கிய பங்காற்றியதோடு மட்டும் அன்றி அமெரிக்க தூதரகத்தை இடம்மாற்றுவதற்காக ஜெரூஸலத்தில் இடம்பெற்ற கோலாகல வைபவத்திலும் பங்கேற்றார். இதே குருஷ்னர் சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் நெருங்கிய நண்பர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதில் மிகவும் பரிதாபத்துக்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்காவுடன் இவ்வளவு நெறுக்கமாக உறவாடும் இந்த சவூதி குடும்பம் தான் மக்கா மதீனா ஆகிய முஸ்லிம்களின் பிரதான வழிபாட்டு இடங்களுக்கும் பொறுப்பாளர்களாக உள்ளனர். இதுதான் இன்றைய முஸ்லிம் உலகின் மிகவும் கவலைக்குரிய நிலை. சவூதி அரேபியா என்பது எல்லாம் வல்ல இறைவனால் முஸ்லிம்களுக்காகத்  தெரிவு செய்யப்பட்ட பூமி. முதலாவது பள்ளிவாசலான கஃபாவை கட்டுவதற்கு இங்குள்ள மக்காவை தான் இறைவன் தெரிவு செய்தான். இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபியை இங்கிருந்து தான் இறைவன் தோற்றம் பெற வைத்தான். முழு மனித குலத்துக்குமான இறுதித் தூதான இஸ்லாத்தை இங்கிருந்து தான் இறைவன் தோற்றம் பெறச் செய்தான்.
ஆனால் என்று இந்த மண்ணில் ஏகாதிபத்தியவாத சக்திகளால் சவூத் குடும்பம் ஆட்சியில் அமர்து;தப்பட்டதோ அன்றிலிருந்து தனது பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களுக்கு சேவகம் செய்வதில் தான் இந்தக் குடும்பம் மிகவும் வெற்கக் கேடான விதத்தில் ஈடுபட்டுள்ளது. உலகம் முழுவதும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான அவர்களின் சதித் திட்டங்களை அரங்கேற்றுவதில் பிரதான பங்கேற்று வருகின்றது.
1960களில் சவூதி அரேபியாவும் எகிப்திய ஜனாதிபதியாக இருந்த கமால் அப்துல் நாஸரின் படைகளும் தத்தமது தரப்பில் இருந்து போராடின. முன்னாள் யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சாலேஹ் 2017 டிசம்பர் 4ல் மரணம் அடைய இரு தினங்களுக்கு முன் ஒரு இரகசியத்தை வெளியிட்டிருந்தார். அன்றைய சவூதி மன்னர் பைஸால் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜோன்ஸனிடம் கேட்டுக் கொண்டதன் பிரகாரம் தான் இஸ்ரேல் 1967 ஜுனில் ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை தொடுத்து எகிப்தின் வசசம் இருந்து சினாய், காஸா பகுதிகளையும் சிரியாவிடம் இருந்து கோலான் குன்று மற்றும் ஜோர்தானிடம் இருந்து கிழக்கு ஜெரூஸலம் ஆகிய பகுதிகளையும் தன்வசம் ஆக்கிக் கொண்டது என்பது தான் முன்னாள் யெமன் ஜனாதிபதி வெளியிட்ட வரலாற்று உண்மை.
கமால் அப்துல் நாஸரை பழிவாங்க வேண்டும் என்ற மன்னர் பைஸாலின் தனிப்பட்ட வஞ்சம் தான் இதற்கு காரணம். 1967 ஜுனில் ஐரோப்பிய அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் தொடுத்த யுத்தத்தின் மோசமான விளைவுகளைத் தான் இன்றும் மத்திய கிழக்கு நாடுகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
சவூதி அரேபிய அரசு தனது யூத கிறிஸ்தவ எஜமானர்களின் இஸ்லாத்துக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை இயலுமானவரைக்கும் அமுல் செய்து இஸ்லாத்துக்கு மாபெரும் சேதங்களை விளைவித்துள்ளது. அதில் பிரதானமான உதாரணம் தான் அவாகளால் அறிமுகம் செய்யப்பட்ட வஹ்ஹாபிஸம். இது இஸ்லாத்தை அழிக்கும் வகையிலான ஒரு மேலைத்தேச எண்ணக்கரு என்றும் மேதை;தேசத்தவர்களின் தேவைக்காகவே தனது முன்னோர்கள் இதை அறிமுகம் செய்து பரப்பினார்கள் என்றும் இளவரசர் சல்மான் அண்மையில் மேற்குலக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். உலகம் முழுவதும் அமைதியாக வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களைக் கூறு போடுவதற்காக இந்தக் கொள்கையைப் பரப்ப சவூதி அரசு தொடர்ந்து பில்லியன் கண்க்கில் செலவிட்டு வருகின்றது. இதன் விளைவு முஸ்லிம்களை மிக மோசமான விதத்தில் பாதித்துள்ளது. அதிலிருந்து விடுபட முடியாத அளவு துன்பங்களை அவர்கள் அனுபவித்து வருகின்றார்கள்.
தங்களது வஹ்ஹாபிஸ கொள்கையை நிலைநிறுத்துவதற்காக சவூதி அரேபியா 330க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்களை அழித்துள்ளது. இதில் நபிகளார் வாழ்ந்த வீடும் ஒன்றாகும். இஸ்லாத்தின் பரம எதிரிகள் கூட இவ்வாறான ஒரு காரியத்தை செய்யத் துணிவர்களா என்பது சந்தேகமே.
துளிர்விடத் தொடங்கும் இஸ்லாமிய சக்திகளை கூண்டோடு அழிப்பதில் சவூதி அரேபியா பிரதான பங்கு வகித்துள்ளது. உதாரணத்துக்கு 1979ல் ஈரானில் ஆயத்துல்லாங் கொமய்னி இஸ்லாமிய புரட்சியை கொண்டு வந்த போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் என்பனவற்றுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக அன்றைய ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ{ஸைனை தூண்டி விட்டது. இதன் காரணமாக எட்டு வருடங்களாக நீடித்த யுத்தத்தில் பத்து லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனால் இரு முஸ்லிம் நாடுகளுக்கும் 800 பில்லியனுக்கும் அதிகமான தொகை இழப்பும் ஏற்பட்டது.
அல்ஜீரியாவில் இஸ்லாமிய முற்போக்கு சக்திகள் அந்த நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் அதிகப் படியான ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டிய போது அந்த நாட்டில் தலையெடுத்த இஸ்லாமிய ஜனநாயகத்தை வேறாடு சாய்க்க ஒன்றிணைந்த சக்திகளுக்கு சவூதி அரேபியா பக்க பலமாக இருந்தது. அதன் விளைவாக அங்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை முதன் முதலில் அங்கீகரித்த நாடு சவூதி அரேபியா என்பதும் இங்கே நினைவூட்டத்தக்கது.
2013 ஜுலை 3ல் எகிப்தியர்கள் தமது பெரு விருப்புக்குரிய இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பிரதிநிதி மொஹமட் முர்ஸியை தமது ஜனாதிபதியாகத் தெரிவு செய்த போது, எகிப்திய வரலாற்றில் 61 வருடங்களுக்குப் பின் முதற் தடவையாக நியாயமான ஒரு தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவரை பதவியில் இருந்து கவிழ்க்கவும் பிரதான உதவி வழங்கிய நாடு சவூதி அரேபியா தான். சவூதி, அபுதாபி, குவைத் என்பன இணைந்து இதற்கென 11 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. அங்கும் தமது கைக்கூலியாக அல்பத்தாஹ் அல் சிசி என்ற இராணுவ சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்தினர்.
1990ல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து குவைத் சர்ச்சையை உருவாக்கின. ஆயிரக்கணக்கான ஈராக் மக்கள் கொல்லப்பட்ட இந்த யுத்தத்துக்காக சவூதி மட்டும் 56 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இந்த யுத்தம் இந்தப் பிராந்தியத்தையே நாசமாக்கியது.
ஈராக், லிபியா, சோமாலியா, சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரபு மக்களின் எழுச்சியை அடக்கி அழித்து துவம்சம் செய்வதில் சவூதி அரேபியா அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் யுத்த வெறியர்களுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்டுள்ளது.
பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் எல்லா குற்றச் செயல்களையும் அமெரிக்கா கண்டும் காணாமல் விட்டுள்ளது. ஒரு தசாப்தத்துக்கு முன்பே அது பலஸ்தீன மக்களை கைவிட்டு விட்டு இஸ்ரேலுடன் இரகசிய சுட்டணி அமைத்துள்ளது. உதவிகளற்ற பலஸ்தீன மக்கள் மீது தனது காட்டுமிராண்டித் தனத்தை கட்டவிழத்து விட இஸ்ரேலுக்கு அது அனுமதி அளித்துள்ளது. சவூதி அரேபியாவும் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளும் எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்குடன் இணைந்து பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்துக்கு இலஞ்சம் கொடுத்து இஸ்ரேலை அங்கீகரிக்க வைத்தன. அதன் மூலம் இஸ்ரேலுக்கான நல்லெண்ணக் கதவுகளை அவர்கள் திறந்து விட்டனர். இதன் விளைவாக இன்று பலஸ்தீன அதிகார சபை பலஸ்தீனத்தின் உண்மையான சுதந்திரப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கி நசுக்கி கண்கானிக்கும் ஒரு அமைப்பாகவே செயற்படுகின்றது. இஸ்லாத்துக்கு எதிரான நாணயத்தின் இரு பக்கங்களாகத் தான் சவூதியும் இஸ்ரேலும் செயற்படுகின்றன.
சவூதி அரேபியா உலகின் ஏனைய பாகங்களிலும் முஸ்லிம்களை கைவிட்டு விட்ட ஒரு நாடாகத் தான் காணப்படுகின்றது. அண்மையில் றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளின் போது அது நடந்து கொண்ட விதம் இதை புலப்படுத்தி நிற்கின்றது. சவூதி அரச குடும்பம் உள்நாட்டில் கொள்ளையடிக்கும் எண்ணெய் வளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும் செல்வத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முதலீடு செய்கின்றது. சவூதி அரேபியா தன்னிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என அமெரிக்கா அச்சுறுத்துகின்றது. கடந்த பல தசாப்தங்களாக எண்ணெய் வளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பில்லியன் கணக்கான சொத்துக்கள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதில் விரயமாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஏன் ரஷ்யா கூட இந்த ஆயுத கொள்வனவால் செழிப்படைந்துள்ளது.
கடந்த ஒரு வருட காலத்தில் இந்தப் பூமியில் மிகவும் அடக்குமுறையும் கொடூரமும் நிறைந்த அரசாக மாறியுள்ள சவூதி அரேபியா இஸ்லாத்தில் இருந்தும் முஸ்லிம்களிடம் இருந்தும் மிக நீண்ட தூரம் விலகிச் சென்று விட்டது. அது இன்று அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் செய்மதி நாடாக மாறிவிட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உலகளாவிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு மிகவும் விருப்பத்தோடு நிதி உதவி வழங்கும் ஒரு நாடாகவும் சவூதி அரேபியா இன்று மாறிவிட்டது.
சவூதி அரசு நிறுவப்பட்ட ஆரம்ப காலம் முதலே அரச குடும்பத்தின் எண்ணக்கருவாக அது ஒரு போதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக இஸ்லாத்தின் தூய வடிவுக்கு களங்கம் ஏற்படுத்தி அதைப் பின்பற்றுகின்றவர்களை அடக்கி ஒடுக்கி நசுக்கி கொன்று குவித்து வருகின்றது. இஸ்லாத்துக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் தனது சொந்த நாட்டின் செல்வத்தை சூறையாடி பத்திரமாக அதை மேலை நாட்டில் பதுக்கி வருகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் வாழ்வுமுறை முற்றிலும் வித்தியாசமாக இஸ்லாத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயெ அமைந்துள்ளது.
இவற்றின் நடுவே தான் சவூதி அரசு அபுதாபியில் உள்ள மற்ற சாத்தானுடன் இணைந்து யெமன் விடயத்தில் மூக்கை நுழைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்தும் கொடுமை படுத்தியும் வருகின்றது. இவ்விரு சாத்தான்களும் இணைந்து பழம்பெரும் பாரம்பரியம் மிக்க அந்த நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டனர். இந்த உலகம் இதுவரை சந்தித்திராத மனிதப் பேரவலம் அங்கு ஏற்பட்டுள்ளது. முழு நாடும் இப்போது சீரழிந்து போய் கிடக்கின்றது. உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக சிதைந்து போயுள்ளன. சிறுவர்கள், முதியவர்கள் உற்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் மரணத்தை தழுவும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் அவதியுறும் மக்கள் இப்போது உணவின்றி பட்டினியால் வாடும் நிலையும் தோன்றியுள்ளது.
யுத்த வர்ணனையாளர்களின் கருத்தப் படி யெமன் யுத்தம் அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் தொடுக்கப்பட்ட ஒரு யுத்தம். சவூதி அரேபிய கைக்கூலிகள் அதை அமுல் செய்து வருகின்றனர். சவூதி மற்றும் அபுதாபி மீது சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றங்கள மற்றும் இன ஒழிப்பு குற்றங்கள்; சாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆறு முதல் ஏழு தசாப்தங்கள் வரையான காலத்தில் சவூதி அரேபியா இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செய்த எல்லாமே மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது பிடியை விரிவாக்கவும் வலுவாக்கவும் உதவி உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் அரசுகளும் பலவீனமாக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளின் சொந்த மக்களுக்குப் பாதகமாகவே இவை அமைந்துள்ளன.
அந்த வகையில் இன்றைய மத்திய கிழக்கை இஸ்ரேலுக்கு சாதகமான பிராந்தியமாக உருவாக்க சவூதி அரேபியா தேவையான பங்களிப்பைச் செய்துள்ளது. இப்போது தனது நாட்டை நவீன மயப்படுத்தப் போவதாக இளவரசர் சல்மான் கூறிவருகின்றார். இங்கே எல்லாவிதமான நவீன களியாட்டங்களும் அரைகுறை ஆடையில் பெண்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளனர். அதற்கான கடற்கரை ஹோட்டல் வசதிகள் கூட ஏற்படுத்தப்படவுள்ளன. அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களை மகிழ்வூட்டத் தான் இந்த ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் இந்த சல்மானும் அவரது முன்னோர்களும் தோற்றம் பெற நீண்ட காலத்துக்கு முன்பே எல்லாம் வல்ல இறைவன் தனது இறுதித் தூதரின் மூலம் இஸ்லாத்தை எமக்கு வழங்கி உள்ளான் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளத் தவறி விட்டனர். இந்த இஸ்லாம் என்பது உலகம் அழியும் வரைக்குமான ஒரு நவீன வாழ்வு முறை என்பதையும் அவர்கள் மறந்து விட்டனர்.
சவூதி அரேபியாவை ஒரு முஸ்லிம் நாடு என்று இனிமேல் எந்த அளவு கோளை வைத்துக் கூறலாம் என்பதே இன்றைய பிரதான கேள்வியாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் முஸ்லிம்களின் புனித ஆலயங்களின் பாதுகாவலர்கள் என தம்மை அழைத்துக் கொள்வதும் வெற்கக் கேடானதாகும்.
உலகம் முழுவதும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சவூதி இழைத்து வருகின்ற குற்றங்களை உலகில் உள்ள ஏனைய முஸ்லிம்கள் கண்டும் காணாமல் ஊமைகளாகவும் செவிடர்களாகவும் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment