Wednesday, April 16, 2014

ஓர் உரத்த சிந்தனை: ஷிஆ முஸ்லிம்கள் 'காஃபிர்'களா?

தென்னாஃபிரிக்காவின் அல்-பலாக்ஹ் பத்திரிகை ஆசிரியர் வினவுகிறார்:

ஷிஆ முஸ்லிம்கள் 'காஃபிர்'களா?
 

வாழ்க்கையில் வேறெதனையும் உருப்படியாகச் செய்யத் தெரியாத மவ்லவிமார்களும் அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களும், இப்போது புதியதொரு விளையாட்டை ஆடத் துவங்கி யிருக்கின்றனர். அது என்னவென்றால், நமது ஷிஆ முஸ்லிம் சகோதரர்களை 'காஃபிர்கள்' என அழைப்பது. அல்லாஹு சுபுஹானஹுத் தஆலா குர்ஆனிலே, நாம் எந்த வொரு முஸ்லிமையும் ஒரு 'காஃபிர்;' என அழைக்கக் கூடாது எனத் தெளிவாக கூறியுள்ளான். (அல்-குர்ஆன் 4:94); நமது உயிரிலும் மேலான ரசூலுலலாஹ் (ஸல்) அவர்கள், சக முஸ்லிம்களை 'காஃபிர்கள்' என அழைப்பதினின்றும் நம்மைத் திட்டவட்டமாகத் தடுத்துள்ளார்கள். ஆயினும், இந்த அற்பத்தனம் கொண்ட, சிறிய உள்ளம் படைத்த புரோகிதர்கள் - முஸ்லிம் உலகின் அறிவுக் குள்ளர்கள், முஸ்லிம் என்றால் யார், யாரில்லை என நிர்ணயிக்கும் மாபெரும் பொறுப்பை, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொறுப்பு என்ற அந்தஸ்திலிருந்து அல்லாஹ்வை கழற்றி எறிந்து விட்டு, அந்தப் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கின்றனர். மேலும் அதே நேரம், நமது நபியவர்களின் கண்டிப்பான உத்தரவையும் ஒதுக்கித் தள்ளுவதற்கும் மிதித்துச் செல்வதற்கும் துணிந்திருக்கின்றனர்

வெள்ளிக்கிழமை நாட்களிலும் ஏனைய தருணங்களிலும், ஷிஆ முஸ்லிம்களை  'காஃபிர்கள்' எனத் தாக்கி, பிரசங்கங்கள் செய்வதற்கும் (அத்துடன்;-அல்லது) தங்கள் வழமையான துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வதற்கும் முனைகின்றனர். அவர்களின் அர்-ரஷீத், மஜ்லிஸ், சவுத்துல் இஸ்லாம். இன்ன பிற போன்ற (தென்னாஃபிரிக்காவிலிருந்து வெளிவரும்) பத்திரிகைகளில் ஷிஆக்களை வெளிப்படையாகப் பழித்துரைக்கும் ஒரே மாதிரியான-முழுக்க வெறுப்பை உமிழும் கட்டுரைகள் நிறையவே காணப்படுகின்றன.

இமாம் குமைனி 'ஷிஆ' என அடைமொழியிட்டு கண்டிக்கப்படுகிறார். இமாம் குமைனி சாதித்ததைப் போன்ற எதனையும் இஸ்லாத்திற்காக நமது 'சுன்னி' மவ்லவிகளுள் எவராவது சாதித்திருக்கின்றாரா? இந்த சிறிய உள்ளம் படைத்த, கீழ்த்தரமாக சேற்றை அள்ளி வீசும் நமது புரோகிதர்கள், வாய்ச் சவடால்களில் மட்டுமே மிகவும் திறமை வாய்ந்தவர்கள்; நமது தீனுல் இஸ்லாத்திற்காக செயல்ரீதியாக எதனையும் செய்ய இயலாதவர்கள். இன்றைய இளைஞர்களும், குர்ஆனையும் நபியவர்களையும் நேசிக்கும் அனைவரும், தர்க்கரீதியான வாதங்களையும் சரியான ஆதாரங்களையும் விரும்புகின்றார்கள் என்பதால், எளிதாக இந்த புரோகிதர்களுடன் சலிப்படைந்திருக்கின்றார்கள்.  

'அஹ்லுல் கிப்லா' (கிப்லாவை முன்னோக்கும் கூட்டத்தினர்)



திருநபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு, அந்தக் காலப் பகுதியில் வாழ்ந்த உலமாக்கள்-ஃபுகஹாக்கள், (முஸ்லிம்களை 'காஃபிர்கள்என விளிக்கும்) தங்களின் தக்ஃபீர் முன்முடிபு மனப்பான்மையை மாற்றிக் கொள்ளத் தீர்மானித்தனர்; மேலும் அவர்கள் இறுதியில், 'லா நக்ஃபுர் அஹதன் மின் அஹ்லில் கிப்லா' (அஹ்லுல் கிப்லாவான எவரையும் ஒரு 'காஃபிர்;' என நாம் தீய குறியிட முடியாது; அதாவது, தனது தொழுகையை நிறைவேற்ற எவரொருவர் -ஆணோ பெண்ணோ- கிப்லாவை முன்னோக்கிறாரோ, அவரை ஒரு  'காஃபிர்' என அழைக்க முடியாது) என்று பிரகடனஞ் செய்தார்கள்.

நீண்ட அடர்ந்த தாடிகளைக் கொண்ட  இந்த 'இறையடியார்'களிடத்தில் நாம் கீழ்க்கண்ட கேள்வியை முன்வைக்கலாமா? 'ஷிஆக்கள், ஸலாத் எனும் தங்கள் தொழுகையை நிறைவேற்ற தங்களின் கிப்லாவாக எதனை முன்னோக்கின்றார்கள்? அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையையா அல்லது மக்காவிலுள்ள கறுப்பு இறை இல்லத்தையா?'

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கும் ஹதீதொன்று புகாரி கிரந்தத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: 'எவரொருவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்'வை மொழிகிறாரோ அவர், திண்ணமாக ஜன்னத் எனும் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்'. அதன்படிசுன்னிக்களைப் போன்றே இதே கலிமாவைப் பிரகடனஞ் செய்து ஏற்றுக் கொள்கின்ற ஷிஆக்கள், (இந்த ஹதீதின் பிரகாரம்,) ஜன்னத்தில் பிரவேசிப்பார்களா அல்லது மாட்டார்களா? என்பதை, மார்க்கரீதியாக ஓரக்கண்-கோணல் பார்வை கொண்ட மதகுருமார் நமக்கு சொல்லட்டும்! நமது நபி (ஸல்) அவர்கள், 'ஷிஆக்களைத் தவிர எவரொருவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்'வை மொழிகிறாரோ அவர், திண்ணமாக ஜன்னத் எனும் சுவர்க்கத்தில் பிரவேசித்து விட்டார்' என்று சொல்லவில்லை என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. .

பயிர்களுக்கு நடுவிலிருந்து அழிவு வேலை செய்யும் களைப் பதர்கள்
 
எவரெல்லாம் நமது தூய தீனுல் இஸ்லாத்தின் மீது உண்மையான அன்பு வைத்திருக்கிறார்களோ, அத்தகைய முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் அல்லாஹு சுபுஹானஹுத் தஆலாவின் பெயராலும் அவனது அன்புத் தூதர் (ஸல்) பெயராலும் அழைப்பு விடுக்கின்றோம்: 'தங்களை மவ்லானாக்கள், ஷெய்குகள், இமாம்கள் என வீம்பு பேசி ஜாலம் செய்கின்ற இந்த 'மார்க்க

வியாபாரிகளை - பயிர்களுக்கு நடுவிலிருந்து அழிவு வேலை செய்யும் களைப் பதர்களை - நம் மத்தியிலிருந்து அகற்றி விடுவதற்கு துணிந்து செயல்படுங்கள்!

இந்த 'மார்க்க வியாபாரி'களுக்கு தவறுதலாக எந்தளவுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் வழங்குகிறோமோ அல்லது எந்தளவுக்கு அவர்கள் மீது அக்கறை செலுத்துகிறோமோ, அவர்கள் அந்தளவுக்கு நம் தலையின் மீது ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள்! துருக்கியின் கமால் அத்தாதுர்க் அந்தக் கால மவ்லவிமார்களுக்கு என்ன செய்தாரோ அதனை நாம் எல்லோரும் செய்வோமாக! அப்போதுதான், முஸ்லிம் சமூகத்தில் நாம் சாந்தியையும் சமாதானத்தையும் காண்போம்; இஸ்லாம் மீண்டும் ஒருமுறை செழித்தோங்கும்!

இந்தப் புரோகிதர்கள் வாயிலாக, இஸ்லாம் உலகின் நகைப்பிற்கு உரியதொன்றாய் ஆகிவிட்டது! இந்தப் புரோகிதர்கள் வாயிலாக, இஸ்லாம் அவமதிக்கப்படு மொன்றாய் தலை குப்புற வீழ்ந்துவிட்டது!
நமது நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரிக்கை செய்து, நமது சக முஸ்லிம்களுடன்எந்த சிந்தனைப் பிரிவைச் சார்ந்தவர்களாக அவர்கள் இருந்தாலும் சரி- நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டவட்டமான வழிகாட்டுதலை, நமக்கு வழங்கி இருக்கிறார்கள்: பெருமானார் (ஸல்)  கூறினார்கள்: 'மூன்று விஷயங்கள் மார்க்கத்தில் மிகவும் இன்றியமையாதவையாகும்: (1) 'அல்லாஹ்;வைத் தவிர வேறு இறைவனில்லை' என மொழியும் ஒரு மனிதனைக் கொல்வதினின்றும் தவிர்ந்து கொள்ளுங்கள்; (2) அவன்/அவள் எந்த வொரு பாவத்தைச் செய்தாலும் சரியே, அவனை/அவளை ஒரு நிராகரிப்பாளர் எனப் பிரகடனஞ் செய்யாதீர்கள்; (3) அவன்/அவள் உடைய எந்த வொரு செயலுக்காகவும், அவனை/அவளை இஸ்லாத்திலிருந்து தூர விலக்கி வைக்காதீர்கள்.' (அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கும் இந்த ஹதீத் சுனன் அபூதாவூத் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது)
(நன்றி: அல்-பலாக்ஹ் பாகம் 25, இல.2 மே-ஜூன் 2000 பக்.3)
(தமிழில்: 'இப்னு புகாரி')

No comments:

Post a Comment